ASTROLOGE

ASTROLOGE

15 January 2011

மோஷம் பொதுபலன்


இந்த லக்னத்தில் தோன்றியவர்கள் நடுத்தரமான உயரமும், கம்பீரமான தோற்றமும் படைத்தவர்கள், நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், அழகிய புருவங்களும், நீண்ட நாசியும், அடர்த்தியான பல் வரிசையும் கொண்டவர்கள். நீண்ட கழுத்தும், சரிந்து காணப்படும் புஜங்களும் அமையப்பெற்ற உங்களது காதுகள் எடுப்பாகவும், நீண்டும் இருக்கும். சுருட்டையான தலை மயிர் அமைந்திருக்கும். உதடுகள் எப்போதும் அசைந்து கொண்டே இருக்கும்.

நீங்கள்பார்வைக்கு அசட்டையாகக் காணப்பட்டாலும் சுற்றுப்புறங்களை இருந்த இடத்தில் இருந்தே கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். உங்களுக்கு முகத்திலும் தலையிலும் தழும்பு ஏற்பட்டு நிரந்தர வடுக்கள் காணப்படும்.பெரும்பாலும் எல்லா விஷயங்களிலும் பொது அறிவு நிரம்பப் பெற்றிருக்கும் நீங்கள், கலா ரசிகர்களாகவும், வினோத பிரியர்களாகவுமிருப்பீர். பிறர் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும், தமக்குத் தெரிந்த விஷயம் போல் கலந்து பேசி ரசிக்கும் சாமர்த்தியம் பெற்றவர்கள். பிறர் கூறும் விஷயங்களை அப்படியே அங்கீகரித்து விடாமல் தனக்கென சொந்த அபிப்பிராயங்களைப் பெற்றிருப்பீர் தனக்கு தோன்றியபடி தான் நடந்து கொள்வதுமல்லாமல், தனக்குப் பிடித்த மாதிரிதான் செய்யவேண்டும் என்ற பிடிவாதம் குணம் உங்களுக்குஉண்டு. வாத பிரதிவாதங்களில் திறமையோடு விவாதித்து தனது அபிப்பிராயத்தை நிலை நாட்டி எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல்படைத்தவர். வெகுளியாகவும், கபட மற்றும் காணப்படும் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் ரகசியமாக வைத்திராமல் மனம் திறந்து பேசுவீர். நிர்ப்பந்தத்தின் காரணமாக சொந்த அபிப்பிராயங்களை வெளியிட முடியாத நீங்கள் சமயம் வரும்போது தனது பரந்த மனப்பான்மையை வெளிக்காட்டி பேரும் புகழும் பெற்றிடுவார்கள்.

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எவ்வித துன்பங்கள் நேர்ந்தாலும், அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து தங்களது சுயநலத்தை தியாகம் செய்தாவது அவர்களுடைய காரியங்கள் வெற்றி பெறுவதற்காக பாடுபடுவீர்.தங்களது கௌரவத்துக்கும் அந்ததுக்கும் பழுது ஏற்படாத எந்தப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்வீர்.. எந்தப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாலும் அவற்றிற்கு ஏற்படும் எதிர்ப்புகளையும், இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி கருத்தோடும் ஊக்கத்தோடும் செயலாற்றி வெற்றி பெறுவீர். ஆனாலும் இவ்வளவு திறமை வாய்ந்த நீங்கள் திடீரென்று மன வேறுபாடு அடைவதும் உண்டு. உங்கள் சுயேச்சையான சுபாவத்தையும் அகங்கார குணத்தையும் கண்டு உங்களை நேசிப்பவர்கள்கூட சிலசமயம் வெறுப்படையும் படி நடந்து கொள்வதும் உண்டு.நீங்கள் வாக்கு சாதுரியம் பெற்றவர்கள். வாத-பிரதிவாதங்களில் தங்களது வாக்குவன்மையை அதிகமாக வெளிப்படுத்தி அவற்றில் வெற்றியும் பெறுவீர். தைரியமும், அஞ்சா நெஞ்சமும் படைத்தவர்களாயினும் சில சமயங்களில் திடீரென்று மன அமைதியினை இழந்து கவலையுடன் காட்சி அளிப்பீர். ஆனால், அந்த கவலையை உடனுக்குடனே மறந்து விடும் ஆற்றல் பெற்றவர்நீங்கள்.எந்தவித காரியத்தையும் திடீர் என்று தீர்மானிப்பீர்.மன அமைதியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் பிறருக்குத் தெரியாதவாறு மறைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவர் நீங்கள்.. சிரிக்கச் சிரிக்கப் பேசும் நீங்கள் தங்களது வாக்குத் திறமையால் மற்றவர்களைக்குலுங்க, குலுங்க சிரிக்க வைப்பீர்கள். பிறரை வசீகரிக்கத்தக்க பேச்சுத்திறன் படைத்தவர்கள் என்றால் அது மிகையாகாது. அழுத்தம் திருத்தமாகவும் ஆணித்தரமாகவும் பேசும் நீங்கள் சில சமயக்ஙளில் பிறர் தவறாகப் புரிந்து கொள்ளும் அளவிற்கு தங்கள் கருத்தை மாற்றியும் பேசுவீர். சுருங்கச்சொல்லி விளங்கவைப்பதே குறிக்கோளாகக் கொண்ட நீங்கள் பிறர் உங்களுடைய கருத்தை எதிர்க்கும்போது மௌனத்தைக் கையளுவீர். நீங்கள் காரிய வாதிகள் ஆனதால் வீண்பழிச் சொற்களுக்குச் செவி சாய்க்க மாட்டீர். சமயம் பார்த்து தன் வாக்குத் திறமையால் பிடிகொடுக்காமல் பேசி பிறரைத் திணறும் படி செய்வீர்கள்.

எங்கள் குடும்பம் பெரிசு என்ற வாக்கிற்கிணங்க நீங்கள் பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயினும், குடும்பத்தில் பல சிக்கல்கள் தோன்றி உங்களை குழப்பத்தில் ஆழ்த்துவதால் நீங்கள் குடும்பத்திலிருந்து தனித்து வாழவேண்டிய நிலை ஏற்படும். குடுத்தினர் யாவரும் உங்களுடைய ஆதரவையே எதிர்நோக்கி இருப்பதால், உங்களுக்குக் குடும்பப் பொறுப்புகள் அதிகரித்து, உங்களுடைய உழைப்பும் ஊதியமும் குடும்ப நலனுக்காகவே பயன் பாடுமென்றால் மிகையாகாது. குடும்பத்துக்காக உண்மையாக பாடுபடும் உங்களைத் தவறாக எண்ணுவதால் விரக்தி மனோபாவம் கொள்வீர்கள் குடும்பத்தில் தலைமை தாங்குபவராக இருப்பதால் குடும்ப சிக்கலிலிருந்து விடுபடுவது மிககடினமாகும். உங்களுக்குக் திருமண வாழ்க்கையும் திருப்தி கரமாக அமைவதில்லை. மனைவியின் ஆரோக்கியக் குறைவு ஒரு புறம் கவலையை அளிப்பதோடன்றி மனைவி வர்க்கத்தாராலும் தொல்லைகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். மனைவி மூலம் பொருள் வசதியோ அல்லது பணவசதியோ ஏற்படவும் நியாயம் இல்லை.

தொழில், பதவி, அந்தஸ்து ஆகியவை உயர்ந்து காணப்பட்டாலும், குடும்பம் பெருகுவதால் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள வாய்ப்புகள் அமைவதில்லை. எனவே உங்கள் வாழ்க்கை திருப்திகரமாக அமையாததற்கும் அடிக்கடி விரக்தி மனோபாவம் தோன்றவும் காரணங்கள் விளங்குகின்றன அல்லவா! உங்களுக்கு தேவைக்கேற்ப பணவசதி ஏற்படுமே தவிர சேமிப்பு நிலையில் சேர்க்கு மளவுக்கு நியை வருமானம் கிடைக்காது. பொதுநல சேவைகளில் கருத்துக் கொண்டு பிறர்களுடைய குறைகளை தீர்க்க ஈடுபடுவதில் உங்களுக்கு தொல்லைகள் தான் அதிகமாகும். கடன் வாங்கியாவது பிறருக்கு கடன் கொடுக்க நேரிடுவதால் உங்களுக்கு பாதகம் தான் ஏற்படும். ஏனெனில் கடன் பெற்றவர்கள் திரும்பத் தருவதுமில்லை; அதுவுமல்லாமல் நன்றியை மறந்து தூற்றவும் செய்வார்கள். எனவே வீண் விரோதங்களும் தொல்லைகளும் ஏற்படக் காரணமாகும்.

உங்களுக்கு இளவயதில் அதாவது 36 வயது வரை பண நெருக்கடி அதிகமாகவும், பின் 45வயது வரை நிதி நிலைமை சமானமாக ஒரே சீராகவும் இருந்துவரும். 45 வயதுக்கு மேல்தான் நிதிநிலைமை சீர்திருந்தி பணப்பெருக்கம் ஏற்படும். தாராள மனதுடையவரானதால் நிதி நிர்வாகத்தை தன் கையில் வைத்துக் கொள்வது உசிதமில்லை. செலவினங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதால் வரவு செலவு திட்டங்களை முன் கூட்டியே வகுத்துக்கொள்வது முடியாத காரியமாகும்.நிரந்தரமான தொழில் ஒன்று அமைந்திருந்தாலும் பல துறைகளில் நீங்கள் முனைந்து சுய முயற்சியால் வருமானப் பெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர். பிதுரார்ஜித சொத்துகளால் உங்களுக்கு பயன் ஏதுமிராது. பணவிவகாரங்களில் நீங்கள் முன் யோசனையுடன் திட்டங்களைத் தீட்டி செயல்புரிந்தால், வாழ்க்கை வளம் பெருகி மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு தோன்றாத புதிராகவும் புதுமையாகவும் விளங்கும் வினோத அமைப்புயாதெனில், உங்களுக்கு ஏற்படும் சகோதர-சகோதரிகளின் அமைப்பேயாகும். உடன் பிறந்தவர்களிடத்தில் நீங்கள் அன்புடனும் பாசத்துடனும் நடந்து கொண்டாலும், அவர்களால் எதிர்ப்பும், விரோதமும், கருத்து வேற்றுமைகளும் அதிகரிக்குமேயன்றி ஒற்றுமை நிலை எப்போதும் ஏற்படாது. உங்கள் உதவியைப் பெற்றாலும் நன்றி மறந்து விரோதம் பாராட்டுவது வினோதமன்றோ! நீங்கள் சளைக்காமலும், சுய நலம் கருதாமலும், பிரதிபலனை எதிர்பார்க்காமலும் பரந்த நோக்கத்துடன் பாடுபடும் ஆற்றல் கொண்டவர்கள். தோல்விகளை கண்டு மிரளாமலும் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமலும், உறுதி தளராமலம் முன்னேற்றப் பாதையில் முன்னேறிச் செல்லும் செயல் வீரர்களென்றால் உங்களுக்கு தகும். புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காமல், தானுண்டு தம் காரியம் உண்டு என்ற குறிக்கோளுடன் எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக, துணிகரமாக ஈடுபட்டு வெற்றி பெறும் ஆற்றல் பெற்றவர்கள் நீங்கள்.ஊதியத்தைப் பற்றிக் கவலைப்படாமல், உழைப்பையும் கடமையையும் பெரிதெனக் கருதும் நீங்கள் எப்பணியில் ஈடுபட்டாலும், பிறர் உதவியின்றி தாமாகவே மனோபலம் குன்றாமல் ஈடுபட்டு செயலாற்றி வெற்றிக் கொடியை நாட்டிடுவர்.உங்களுக்கு சிறுவயதில் அன்னையின் ஆதரவும், அரவணைப்பும் குறைந்து காணப்பட்டாலும், இறுதிவரை அன்பும், பாசமும் உங்களுக்குண்டு. எனினும் தாயார் உடல் நலக்குறைவினால் அடிக்கடி பாதிக்கப்படுவார். ஒருசிலர் வேறு இடத்தில் வளர்வதும் உண்டு. உங்களுக்கு கல்விப் பயிற்சி ஓரளவு சாதாரணமானதாகத்தான் அமையும். ஆயினும் சிலர் பட்டப்படிப்பு பெறும் வாய்ப்பும் பெறுவர். சிலருக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் ஏற்படலாம்.

நுண்ணிய கலை ஆர்வமும், ஆராய்ச்சித் திறனும் நல்லவிதமாக அமையப்பெற்ற நீங்கள் எந்த ஒரு தொழிலையும் அனுபவ நுட்பத்துடனும், சமயோசித சாதுரியத்துடனும், திறமையுடனும், பிறர் மெச்சும்படியாக புதுமையான கருத்துகளுடன் செயலாற்றும் திறன் படைத்தவர்கள்.

உயர்ந்த கல்வி பெறாவிட்டாலும் அதிக படித்தவர்களுக்கீடாக தோற்றமளித்திடுவர்.

வாழ்க்கையில் சகல வசதிகளும் பெற்று இன்ப சுகங்களை அடைய வேண்டுமென்ற ஆவல் கொண்டவராயினம் உங்களுடைய அன்றாட வாழ்க்கையின் நிலை அதற்கு இடம் தராது. சில சமயங்களில் தானாகவே ஏற்படும் சுக பலன்களை தங்களது கவனக்குறைவினால் நழுவவிட்டு பின் வருந்துவதும் உண்டு.

எது எப்படியிருப்பினும் இன்பதுன்பங்களை சரிசமமாக ஒரே நோக்கத்துடன் பாவிப்பார்கள்.

உங்களுக்கு வாய்க்கும் புத்திரர்கள் நற்குணம் நிரம்பியவர்களாகவும், புகழ், கௌரவம் ஓங்கப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். அவர்களால் பிறந்த குலத்திற்கு பேரும் சிறப்பும் ஏற்படும். தாய்-தந்தையையும் பெரியோர்களையும் ஆதரிப்பவர்களாகவும், தெய்வ-குரு பக்தி நிரம்பியவர்களும், செல்வம், செல்வாக்கு நிரம்பப் பெற்றவர்களுமான பிள்ளைகளே பிறப்பார்கள் உங்களுக்கு மூல ரோகம் போன்ற உஷ்ணாதிக்கமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உணவு விஷயங்களில் அதற்கேற்றவாறு கட்டு திட்டங்களை அனுசரித்தல் நலம். கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஆகார விஷயங்களில் உங்களது இஷ்டம்போல் உண்ணும் சுக போஜன பிரியர்கள். சிற்றுண்டியை அதிகம் விரும்பும் நீங்கள் கடித்துத்தின்னும் உணவுப் பொருள்கள் இடையிடையே அமைந்திருக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்கள். நீங்கள் எதையும் சூடாகச் சாப்பிட விருப்பம் கொண்டவர். உங்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு ஏற்ப உணவு வகைகளை அமைத்துத் தருவது உங்களுடைய தாயார் அல்லது மனைவியின் கடமையாகும். தனக்கு வேண்டாதபோது எவ்வளவு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டாலும் உணவை ஏற்காத நீங்கள், சீக்கிரத்தில் ஜீரணம் ஆகக்கூடிய உணவு வகைகளையே விரும்புவர். நிறைய தண்ணீர் குடிப்பீர். ஒரு சிலருக்கு மூளைக்கோளாறும் ஏற்பட்டு நிவர்த்தியாகும்.நீங்கள் தன் சக்திக்கு மீறி பிறருக்கு பொருளுதவி செய்வதாலும், அளவுக்குமீறி பிறரை நம்புவதாலும் தாங்களே கடன் தொல்லைகளில் ஈடுபடக் காரணமாகின்றீர். எனவே, நீங்கள் பிறருக்குக் கடன் கொடுக்கும் விஷயத்திலும், பிறருக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நீங்கள் சிங்காரவினோதங்களை ரசிப்பவர்களாகவும், பெண்களிடம் ஈடுபாடுடையவர்களாகவும் இருப்பீர்கள். பெண்கள் விரும்புவதை பூர்த்தி செய்யவும் ஆவலுடையவர்கள் போல வெளிக்கு காட்டிக்கொண்டாலும், அவர்களது சுதந்திரமான போக்கை ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள். மாதர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். நம்பும்படி பேசி காரியங்களை சாதித்துக்கொள்வதில் சாமார்த்தியசாலிகள். உங்களுக்கு வாய்க்கும் மனைவியின் ஆரோக்கியக் குறைவாலும், தொழிலை முன்னிட்டு அடிக்கடி பிரிந்து வெளியூர் செல்லவேண்டிய நிலை ஏற்படுவதாலும் உங்களுடைய தன்னிச்சையான குணங்களால் மனைவி பொறுமை இழந்து சஞ்சல சுபாவமுடையவளாக அமைவதும் உங்களது திருமண வாழ்க்கை திருப்திகரமாக அமையாததன் காரணங்களாகும். உங்களுக்கு ஒற்றுமையான திருமண வாழ்க்கை அமைந்தால் இருவரில் ஒருவரது உடலாரோக்கியம் கெடும் அல்லது உடலரோக்கியம் இருவருக்கும் சிறந்து காணப்பட்டால் ஒற்றுமை குறைந்தும் பூசல்கள் நிறைந்தும், சரிவுபிரிவுகள் ஏற்பட்டும் தனிமையாக வாழ்வதும் ஏற்படும்.

நீங்கள் பெரும்பாலும் தீர்க்காயுள் பெற்றவர்களாகவே இருப்பீர்கள். உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் அவை உடனுக்குடன் சீரடையும். உங்கள் வாழ்க்கை இன்பதுன்பங்கள் கலந்ததாகவே இருக்கும் என்றால் மிகையாகாது. ஆனாலும், தீவிர தெய்வ பக்தியும், இரக்ககுணமும் கொண்டவர்களாதலால் நீங்கள் ஈடுபடும் எந்த காரியத்திலும் இந்த குணம் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும்.தகப்பனாருக்கும் உங்களுக்கும் இறுதிவரை ஒற்றுமை நீடிக்கும். இவர் பிறந்த நாள் முதல் தகப்பனாருக்கு யோக காலமே என்று கூற வேண்டும்.

எந்த தொழிலை ஏற்றுக் கொண்டாலும் அதை திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். கை நுட்ப, சிற்ப வேலைகள், சங்கீதம் முதலிய தொழில்களிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டு. கடின உழைப்பாலும் அவசரமாகவும் செய்யவேண்டிய வேலைகளில் சோம்பலின்றி ஈடுபட்டு முடித்துக் காட்டுவீர்கள். எனினும் தங்களது தொழில்களில் பிறரது அனாவசிய தலையீடுகள் ஏற்படுவதைப் பொறுக்க மாட்டீர்கள். உங்களுக்கு பெரும்பாலும் அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்தக்கூடிய உயர் பதவிகளே வாய்க்கும் எனலாம். கடின உழைப்பை ஏற்கும் எந்தத் தொழிலிலும், எல்லா துறையிலும் ஈடுபடுவீர்கள்உங்களுக ராணுவம், போலீஸ், தீயணைக்கும் படை, வைத்தியத்துறை, விவசாயத் தொழில் எந்திரம், அச்சுத் தொழில், இரும்பு முதலிய ஸ்தாபனங்களில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு கலைத் துறைகளிலும், அரிசி வியாபாரத்திலும், வாகனக் கருவிகளை வாடகைக்கு விடுதல், கால்நடைகளாலும் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு சொந்தத் தொழில் அமையக்கூடும்.

இனி இந்த லக்னத்தில் பிறந்த மாதர்களின் பலன்களைப் பார்க்கலாம்.

நீங்கள் கவர்ச்சிகரமான உருவமும், அழகும் பெற்றவர்களாக இருப்பீர். ஆசார சீலர்களாகவும், சமையல் கலையில் திறமைசாலிகளாகவும், வீட்டு நிர்வாகத்தைத் திறம்பட வகிப்பவர்களாகவும் இருப்பீர். உங்களுக்கு சகோதர பாசம் அதிகம் உண்டு. தங்களது உதார குணத்தினால், நண்பர்களுக்காக எத்தகைய தியாகம் செய்யவும் பின்வாங்க மாட்டார்கள். முன்கோபிகளாகவும், பிடிவாதம் பிடிப்பவர்களாகவுமிருப்பதால் உங்களை அதிகாரத்தினால் அடக்குவது மிகவும் சிரமம். அன்புடன் நடந்து அவர்கள் போக்குக்கு விட்டுப் பிடித்தால் மிக சிரமமில்லாமல் உங்களை வசப்படுத்த முடியும். உங்களது குடும்ப வாழ்வைப் பொறுத்த மட்டிலும், கணவனாலும், குழந்தைகளாலும் திருப்தியான பலன்கள் ஏற்படுவதில்லை. உணவில் நாட்டமின்றி சிற்றுண்டியுடனே திருப்தியடைவார்கள். பொறுமையும், நிதானிக்கும் சக்தியும் குன்றியவர்கள். உங்களுடைய வெறுப்பை சம்பாதித்துக் கொள்பவர்களைப் பழிவாங்க எந்த காரியத்திலும் வரும் பலனை ஆராய்ந்து பார்க்காமல் துணிவுடன் எதிற்கும் குணம் படைத்தவர்கள்.

என்னில் உள்ளது