ASTROLOGE

ASTROLOGE

20 January 2011

கடகம் பொது பலன்


நண்டானது தனக்கென ஏற்படுத்திக் கொண்ட வலையில் வந்து சிக்கிக்கொள்ளும் பிராணிகளைஒரு முறை பிடித்ததும் விடாமல் தன்னுடைய முழு வலுவைக் கொண்டு கிரகித்து இழுத்துச் செல்லும். பிடிபட்ட பிராணி தன்னைவிட அதிக வலுவுள்ளதாக இருந்தாலும் தன்னுடைய பிடியைத் தளரவிடாது தன்னுடைய கரம் களையப்படினும் பொருட்படுத்தாது பிடிமட்டும் எத்தருணத்திலும் நழுவவிடாது. இதற்கு ஞாபக சக்தியும் அதிகம் கண் பார்வையும் கூர்மையானது. இந்த லக்னத்தில் பிறந்தவகள் நண்டின் குணத்தைப் பிரதிபலித்துக் காட்டுவார்கள்.

லக்னாபதிபதி சந்திரனின் அம்சத்தில் பிறந்த இந்த ராசி நேயர்களுக்கு சாந்தம், சகிப்புத்தன்மை, அமைதி காக்கும் தன்மை, கலையார்வம், எல்லாவற்றிலும் பற்றுடைமை, சங்கீதம், நடனம், நாடகத்துறையிலார்வம் முதலியவை இவர்களிடத்தில் மேலோங்கி நிற்கும். மேலோரிடத்தில் மரியாதையும் கடவுள் பக்தியும், நேர்மைக்கும் நீதிக்கும் தலைவணங்குவதுமான சிறந்த குணங்களை இவர்களிடத்தில் காணலாம். நடுத்தரமான உயரம் கொண்ட இவர்கள் சிறுவயதில் ஒல்லியாகவும், நடுவயதிற்குமேல் உடல் பெருத்தும், உருண்டு திரண்ட அங்க அமைப்புகளும், தடித்த சரீரமுடையவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்களின் தலை மேல்புறம் நீண்டு மென்மையான ரோமங்கள் நீண்டும் அடர்த்தி குறைந்தும் இருக்கும். சிறிய கழுத்தும் புஜங்கள் சரிந்தும் காணப்படும். இவர்களுக்கு கூர்மையான மூக்கும், உயர்ந்த நாசியும், நீர் படிந்த கண்களும், சிறுத்த கால்களும் அமைந்திருக்கும். பேச்சில் உறுதி தென்பட்ட போதிலும் மெலிந்த குரலுடன் பேசக் கூடியவர்கள். நடையில் வேகமும், குறுகுறுப்பான பார்வையுமுடையவர்கள்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்புடன் இயங்கி தம் காரியங்களைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். கடுமையான வேலைகளையும் சுலபமாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்ற இவர்கள் தன்முயற்சியில் தோல்வியடையினும், கொள்கையை விட்டுக்கொடுக்காமல் விடாமுயற்சியுடன் செயல்பட்டு செய்து முடிக்கும் திறமைசாலிகள். இவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர்கள் எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளக் கூடிய திறமை இவர்களுக்குண்டு. யாவரிடமும் சகஜமாக பழகக் கூடிய இவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்கள். துரிதமாக செயல்படுபவராயினும் அவசரக்காரர் அல்லர். எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன் தீர ஆலோசித்தபின் தான் ஒரு முடிவுக்கு வருவார்கள். துணிந்து ஈடுபட்டால் எதிர்ப்புகள் எது வந்தாலம் தாங்கிக்கொண்டு செயல் புரிந்து வெற்றிக்கொடி நாட்டி வருவார்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். எதையும்முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும், கற்பனை சக்தியும் மிக்கவர்கள். வேடிக்கையாகப் பேசுவார்கள். கலாரசிகர்களான இவர்கள் லலித கலைகள் எதுவாயினும் ரசித்துப் போற்றக் கூடியவர்கள். ஆனால் தர்க்க ரீதியாக எதையும் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.ஆழ்ந்த கருத்துடைய இவர்களுக்கு ஞாபக சக்தி அதிகமுண்டு. சுகம், துக்கம், அனுதாபம், கோபம், பொறாமை, வெகுளித்தனம் போன்ற சுபாவங்கள் இவரிடத்தில் சீக்கிரம் இடம் பெற்றாலம் நீண்ட நேரம் தாங்காது. வாழ்க்கையில் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்டவர்கள்; பெண்கள் ஆசைப் படும் பொருள்களில் இவர்களுக்கு விருப்பம் அதிகம் காணப்படும். தேவையானாலும், தேவைப்படாவிட்டாலும் எதையும் சேர்த்து வைக்கும் விருப்பம் கொண்டவர்கள். இவர்களுடன் ஆரம்ப காலத்தில் பழகுவது கடினமாயினும் பழகியபின் லேசில் விடமாட்டார்கள். தம்முடைய உறவினர்களிடத்திலும், சொந்த நாடு, சொந்த மொழி, சொந்த மனிதர்கள், சொந்த ஊர் என்ற சுயாபிமானம் மிக்கவர்கள். கீழ்ப்படிந்தவர்களிடத்தில் அபார நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்காக எதையும் தியாகம் செய்யத் துணிவதால் வாழ்க்கையில் அவ்வப்போது இடையிடையே ஏமாற்றங்களையும் சந்திக்க நேரும்.இவர்களுக்கு ஓய்வு எடுத்துக்கொள்ள நேரம் கிடைப்பதரிது. நீண்டநேரம் தூங்கி ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தாலும் சூழ்நிலை இடம் தராது. தூக்கத்திலும் சுய உணர்வு பெற்றவர்கள். ஞாபக சக்தி அதிகம் கொண்ட இவர்களை யாராலும் ஏமாற்ற இயலாது. பழைய ஞாபகங்களை அடிக்கடி நினைவுக்கு கொண்டு வந்திடுவார்கள். பழைய சாமான்களை சேகரித்து பத்திரப்படுத்தும் வழக்கம் இவர்களிடம் உண்டு. சுறு சுறுப்புடையவர்களானாலும், பிடிவாதக்காரர்கள். கற்பனா சக்தி மிக்கவர்கள். சிறு விஷயங்களிலும் அதிக கவலை கொள்வார்கள் பறவி சங்கோஜியாக இருப்பதால் கூட்டத்தில் அதிகம் பழகாமல் ஒதுங்கியே காணப்படுவார்கள். தம்முடைய கருத்துகளையும் நேராக வெளியிடாமல் மறைமுகமாக வெளியிடுவார்கள். நண்பர்களுக்காக இவர்கள் சுய நலத்தையும் தியாகம் செய்யக் கூடியவர்கள். இவர்களிடத்தில் வாக்களித்தவர்கள் அதை நிறைவேற்றாமல் தப்பிக்க முடியாது. பலரிடத்தில் சுட்டிக் காட்டியும், கோள்மூட்டியும் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளும் காரியவாதிகள். இவரிடத்தில் தவறு செய்தவர்களும், வாக்களித்தவர்களும், சொன்னதை மறந்து கொள்கையை ஏமாற்ற நினைப்பவர்களும் இவர்களிடமிருந்து தப்ப இயலாது. எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் ஏற்படினும், பிடித்த பிடியை விடாமல் சட்டதிட்டங்களை நிறைவேற்றுவார்கள்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் தாம் கொடுத்தவாக்கை நிறைவேற்றத் தவறாதவர்கள். அதுபோலவே தமக்கு அளித்த வாக்குத் தவறினால் கண்டித்து சினம் கொள்வார்கள். பேச்சில் சலிப்படையாமல் பேசியதையே மீண்டும் மீண்டும் ஓயாமல் மணிக்கணக்கில் பேசுவார்கள். பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமலும், அதைப் பற்றிக் கவலைப்படாமலும், தங்கள் கருத்துகளை வெளிப்படையாகவே கள்ளம் கபடமின்றி வெளியிடுவார்கள். வெகுளித்தனம் படைத்தவராயினும் முக்கியமான கருத்துகளை மூடி வைத்துக் கொள்வார்கள். பிறர்க்கு இவர்களால் எந்தவித இடைஞ்சலும் ஏற்படக் கூடாது என்ற கொள்கையுடையவர்கள். சங்சீதக் கலையிலும் ஆர்வமிக்கவர்கள்.

பெரிய குடும்பத்தைச் சார்ந்த இவர்கள் குடும்ப விவகாரங்களில் மிகுந்த அக்கறையுடையவர்கள். குடும்பப் பொறுப்பும் பேணி வளர்க்க வேண்டுமென்ற அபிலாஷையும் இவர்களிடத்தில் நிரந்தரமாக இடம்பெறும். குடும்பத்தலைவராகவும், போஷகராகவும் விளங்குவதால் இவர்களுக்கு இடையூறுகள். எதிர்ப்புகள் எதுவந்தாலும் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தி பெற்றவர்கள். சில சமயங்களில் முன் கோபத்தினால் கடின வார்த்தைகளைப் பிரயோகிக்க நேருமாகையால் குடும்பத்தினர் இவர்களை வெறுக்கவும் நேரிடும். சுபகாரியங்களுக்காக அடிக்கடி செலவு செய்யவும். தலைமை தாங்கவும் நேரிடுவது இவர்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து அடிக்கடி ஏற்படக்கூடிய நிகழ்ச்சிகளாகும் இவர்களுக்குப்பின் இவர்களது குடும்பம் வளர்ச்சியடையும். அதாவது இவர்கள் பிறப்பதற்கு முன் சிறியதாய் இருந்த குடும்பம் இவர்களுக்குப் பின் செழித்து வளர்ச்சி பெற்று பிரபலமடையும். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் எந்தி விதத்திலும் பணத்தைச்சம்பாதிக்கக்கூடிய திறமை பெற்றவர்கள். தாராளமாக செலவு செய்வதால் கையில் பணம் வசதி குறைந்தால் மிகவும் கவலை கொள்வார்கள். வருமானம் குறைவுபட்டாலும் பழக்கத்திற்கு மாறாக செலவைக் குறைத்துக் கொள்ள விருப்பமில்லாதவர்கள் ஆதலால் இவர்களுக்கு பண விவகாரத்தில் தொல்லைகள் ஏற்பட்டுத்தான் வரும். தமக்கு வரவேண்டிய பணம் முதலியவை தாமதப்பட்டாலும், பிறர்க்குக் கொடுக்க வேண்டியதை உடனுக்குடன் கொடுத்திடுவார்கள். பிறர்க்கு இவர்கள் கடனாகக் கொடுக்கும் பணம் பொருள் எதுவாயினும் இவர்கள் கடனாகக் கொடுக்கும் பணம் பொருள் எதுவாயினும் இவர்கள் திருப்பிப் பெறுவது கடினம். ஆகையால் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பண விணஷயங்களில் நெருங்கிப் பழகுபவரிடத்திலும் கூட அடிக்கடி வீண் விரோதங்களும் மனஸ்தாபங்களும் ஏற்படக்கூடும். சுக சௌகரியங்களைப் பெருக்கிக் கொள்ளவும், வாழ்க்கை வசதிகளை நன்கு அமைத்துக் கொள்ளவும், ஏற்படும் ஆடம்பர செலவுகளுக்கேற்ப பணவசதிகள் ஏற்பட்டாலும் பணம் சேமிப்பது என்பது முடியாத காரியமாகும். அப்படி ஏதாவது சேமித்து வைத்தாலும் உடனுக்குடன் எடுத்து செலவு செய்து விடுவார்கள்.

இந்த லக்ன ஜாதகர்களின் உடன் பிறந்த சகோதரர்களால் இவர்களுக்கு ஆதாயங்களுக்குப் பதிலாக பாதக பலன்கள் தான் மிஞ்சிக் காணும். ஒற்றுமையாக இருப்பது மிகவும் கடினம். ஒருசிலர் நெருங்கிய ஒற்றுமையுடன் உயிருக்குயிராய் பழகுவா£கள். ஆனால் இப்படி அமைவது துர்லபம். மூத்த சகோதரர்களால் இவர்களுக்கு பாதகம்தான் அதிகம் என்றால், இளைய சகோதரர்களால் செலவினங்கள் அதிகரித்துக் காட்டும். எனவே இருவகை சகோதரர்களாலும் இவர்களுக்கு அனுகூல பலன்களைச் சொல்வதற்கில்லை. உடன் பிறந்த சகோதரிகள் ஆனால் சாதகமான பலன்களுண்டு. உழைப்பை அதிகம் ஏற்காமல் தூரித காலத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலைகளில் அதிகம் ஈடுபடுவார்கள். கடினமான உழைப்பை ஏற்கும் வேலைகளில் அக்கறை காட்ட மாட்டார்கள். பிறருக்காக ஈடுபடும் வேலைகளை கண்ணும் கருத்துமாக சொந்த வேலை கவனிப்பது போல பாடுபட்டு வெற்றியுடன் முடித்துத் தருவார்கள். சிறிய விவகாரங்களில் அதிக கருத்தை செலவிடும் இவர்கள் பெரிய விவகாரங்களில் கவனம் செலுத்த மாட்டார்கள். கைம்மாறு கருதாது பிறருக்காக பாடுபடும் இவர்கள் துணிச்சலான காரியங்களில் இறங்கி வெற்றி பெற்று பேரும் புகழும் பெறுவார்கள். சிறு வயது வரை தாயாரின் அன்பிலும் ஆதரவிலும் வளர்ந்து வந்த இவர்கள் வாழ்க்கை வசதியும் திருமணைமும் ஏற்பட்ட பிறகும் அன்னையைப் பிரிந்து வாழ்வார்கள். எனினும் தாயிடம் உள்ள அன்பும், பாசமும் என்றும் குறையாமல் நீடித்திருக்கும். இவர்களின் தாய்-தந்தையர் ஒற்றுமையாக இருப்பது கடினம். அப்படி ஒற்றுமையாக இருந்தால் மற்றவர் நேர்மாறாக இருந்து வருவர். ஒரு சில ஜாதகருக்கே பெற்றோர் இருவருடைய அன்பும் ஆதரவும் சேர்ந்து அமைந்திருக்கும்.இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஆரம்ப காலவாழ்க்கை ஆதரவு, வசதி குறைந்து காணப்பட்டாலும் இவரது வாழ்க்கை ஆரம்பித்ததும் சுகமும், உற்சாகமும் குன்றாது வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வர். வாழ்க்கையின் சுக துக்கங்கள் மாறிமாறி ஏற்படினும் துன்பங்களை அதிகம் பொருட்படுத்த மாட்டார்கள். வீண் பொழுதுபோக்கில் நேரத்தை செலவிடுவது இவர்களுக்குப் பிடிக்காது. சுய நலமும் அவசர புத்தியும் அதிகம் காணப்படும். இவர்கள் எந்தநேரத்திலும் மாறான அபிப்ராயத்தை சீக்கிரத்தில் கொள்வார்கள்.கலை ஆர்வம் அதிகம் கொண்டவர்கள். சுயமாகத்தொழில் நடத்தவேண்டு மென்ற ஆர்வம் கொண்டவர்களாதலால் கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு தொழில் நடத்த விரும்ப மாட்டார்கள். சிறு வயதிலிருந்தே சுயமாக வீடு, மனை, மாசல் போன்ற வாழ்க்கை வசதிகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம்கொண்டு அதன்படியே தன் வாழ்நாளிலேயே ஆடம்பர வசதியுடன் சுக வாழ்க்கை அமையப்பெறும் யோகம் படைத்தவர்கள். எந்தக் காரியத்தையும் சீக்கிரமாக முடிக்கவேண்டும் என்ற ஆவல் கொள்வர். அதற்கேற்ப வாகன வசதிகளை நன்கமைத்துக்கொள்வர். அதற்காக ஏற்படும் செலவினங்களையும் பொருட்படுத்த மாட்டார்கள்.

உயர்ந்த கல்வி பெறாதவர்களாயினும் இவர்களுக்கென்று ஏற்பட்டிருக்கும் அறிவாலும், திறமையாலும், ஞானத்தாலும் பொறுப்புள்ள உயர்ந்த பதவிகளையும் சர்வ சாதாரணமாக வெற்றியுடன் நிர்வகித்துக் காட்டுவர். ஒரு சிலருக்கு உயர்ந்த படிப்பு ஏற்படுவதுமுண்டு. இநத் லக்னத்தில் பிறந்த பெரும்பாலான நேயர்களுக்கு வெளிநாட்டு பிரயாணங்களும் வெளிநாடுகளுக்குச்சென்று தொழிற்பயிற்சி பெறும் வாய்ப்புகளும் ஏற்படும்.

பொதுவாக கடக லக்ன ஜாதகர்களுக்கு புத்திரபாக்கியம் இல்லையென்றுதான் கூறவேண்டும். அப்படி இருந்தாலும் பிள்ளைகளுக்கும் இவர்களுக்குமிடையே கருத்து வேற்றுமைகள் தோன்றிடும். முதல் மனைவிக்கு புத்திர பாக்கியம் அமையாததால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். சிலர் தத்து புத்திரர்களையும் எடுத்து வளர்க்கவேண்டிவரும். ஒரு சிலருக்கு சாந்தி பரிகாரங்களைக் கையாண்டு புத்திர பிராப்தி ஏற்படுவதும் உண்டு. ஒருவரது ஜாதகத்தில் குரு நன்றாக அமைந்திருப்பின் புத்திர பிராப்தி ஏற்படும். புத்திர-புத்திரிகளும் நல்ல யோகவான்களாகவே விளங்குவர். இவர்களுக்கு முன் செய்த நல்வினைக் கேற்றவாறு உயர்ந்த பதவிகளும் செல்வாக்கும், அந்தஸ்தும் ஏற்படும் தொழிலில் பிரபலமடைந்து விளங்குவர். நிலம்-பூமி-வீடு ஆகியன நன்கமைந்து அவற்றால் ஆதாயங்களும் ஏற்படும்.

இவர்களை நோய்கொடிகள் வெகுசீக்கிரத்தில் பாதிக்கும். வாய்வு சம்பந்தமான நோய்களும், மலச்சிக்கல் போன்ற நோய்களும் பாதிக்கும். உஷ்ணரோகங்களும், மார்பு, சுவாசகோசம் சம்பந்தப்பட்ட காசநோய் முதலியவையும் ஏற்படலாம். ஆனால் எந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சையினால்தான் குணம் பெற முடியும். நோய் சிறிதாக இருந்தாலும், இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் மிகவும் அதிகம். சகிப்புத்தன்மை மிகவும் குறைவாகப் பெற்றவர்கள். கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது மிக நல்லது. உணவு வகையில் காரத்தையும் குறைத்துக் கொள்ளவேண்டும். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கடன் வாங்குவது என்பது அறவே பிடிக்காத விஷயம். கூடுமான வரையில் கடன் வாங்காமலேயே காலத்தைக் கழித்திடுவர். தங்களது வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகவும், குழந்தைகளின் நலனுக்காகவும் கடன் ஏற்பட்டிருந்தாலும் பெற்றோர் ஏற்படுத்திய கடனாக இருந்தாலும், தமது ஸ்திரப் பொருள்களையும் பொருட்படுத்தாது விற்றாவது கடனை அடைத்து விடுவார்கள். கடன்களால் அதிக கவலை கொள்வர். கடன்களால் விரோதமும் நெருங்கிய நண்பர்கள் கூட விலகுவதும் ஏற்படும். எவ்வளவு கடன் ஏற்பட்டாலும் தமது வாழ்நாளிலேயே கடனை அடைத்து விடமுடியும் என்ற நம்பிக்கை பெற்றவர்கள். அதுபோலவே கடனைத் தீர்த்துவிடவும் முயற்சி செய்து அடைத்துவிடுவர்.

இவர்களுக்கு வாய்க்கும் மனைவி அலுப்பு சலிப்பில்லாமல் ஓயாமல் உழைக்கக் கூடியவளாக அமைவாள். அப்படியிருந்தாலும் இவர்கள் தங்கள் அதிகாரத்தைச் செலுத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு வாய்க்கும் கூட்டாளிகளும் ஓயாமல் உழைக்கக் கூடியவர்களாக அமைவது சர்வ சாதாணரம். இவர்களுடைய உழைப்பையும் பொறுப்பையும் சேர்த்து கூட்டாளிகளே கவனித்துக் கொள்வதாலும், குடும்ப வாழ்க்கையிலும் மனைவியே சகல பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதாலும் இவர்கள் மற்றவர் மீது தன் அதிகாரத்தை செலுத்துவதில் ஆச்சரியமொன்றுமில்லை. சில சமயங்களில் அவர்களின் சிரமத்தை உணரும் பண்பு இருந்தாலும் அவரவர் விதியின் பயன் எனக்கூறி பாராட்டக் கூடிய விஷயமாக கருதமாட்டார்கள். சிலசமயம் கொஞ்சிப் பேசினாலும் அடுத்த கணமே கடுகடுப்பாகவும் தோன்றுவார்கள்.

கடகம், விருச்சிகம், மீனம், மேஷம், மகரம் முதலிய ராசிகளில் பிறந்தவர்கள் இவர்களது வாழ்க்கைத் துணைவியராகவோ அல்லது கூட்டாளிகளாகவோ அமைந்தால் இவர்களது வாழ்க்கை சோபிக்கும் மற்றவர்களானால் அபிப்ராய பேதமும் பொருள் விரயங்களும் ஏற்படும்.

பொதுவாகவே கடக லக்ன ஜாதகர்கள் தீர்க்காயுள் பெற்றவர்களாகவே இருப்பார்கள். தங்களுடைய வாழ்க்கையில் சில முக்கிய மாறுதல்கள் ஏற்படும்போது புதிய விதிகள் ஏற்படும். மரண சம்பவங்களையும், தீயசெயல்களையும் கண்டு பயப்படுவார்கள். ஒரு சிலர் இதற்கு நேர்மாறான கருத்தைக் கொண்டவர்களாகவுமிருப்பார்கள். இவர்கள் அடிக்கடி தூர தேச பிரயாணங்கள் ஏற்கவும் ஒவ்வொரு சமயம் அவற்றை ரத்து செய்யவும் நேரிடும். மனைவியின் உறவினர்களாலும், வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலமாகவும் தொல்லைகள் ஏற்படும். உடன் பிறந்தோர்களால் தொல்லையும் ஏற்படும்.இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் வெளித்தோற்றத்துக்கு கடவுள் பக்தி, ஆசாரம், சீலம் கற்றவராகக் காணப்படினும், இவர்கள் அந்தரங்கமான கடவுள் வழிபாடு, சிந்தனை, தவம், தியானம் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பார்கள். யோகத்திலும், தியானத்திலும், முக்தி மார்க்கத்திலும் முழு மனதுடன் ஈடுபட்டிருக்கும் இவர்களை எளிதில் கலைக்க முடியாது. தங்களது முயற்சிகள் சித்திபெற்றால் மற்றவர்களுக்கும் உபதேசிக்கக்கூடிய தகுதியைப் பெற்றிடுவார்கள். மூடு மந்திரமாகவோ, ரகசியமாகவோ இவர்கள் எந்தக் காரியத்திலும் ஈடுபடமாட்டார்கள். குருபக்தியும், முருபக்தியும் நிறைந்து உள்ளவர்கள். தர்மகுணமும் தாழ்ந்தவர்க்கு தன்னால் இயன்ற அளவு உதவ வேண்டுமென்னும் மனோபாவமும் சிறுவயதிலிருந்தே இவர்களிடம் காணப்படும். பிறர் நலனுக்காக தன் நலத்தைக் குறைத்துக் கொண்டாவது பாடுபடுவார்கள்.

இவர்கள் பிறந்தநாள் முதலாக இவரது தகப்பனாருக்கும் நல்ல யோக வளர்ச்சியும், அதிர்ஷ்டமும் உண்டு. தகப்பனாருக்கு தீர்க்காயுளும் உண்டு. இறுதிவரை தகப்பனாரிடத்தில் மாறாத அன்பும், பாசமும், பக்தியும் ஒற்றுமையும் கொண்டிருப்பார்கள். தகப்பனார் மூலம் இவர்களுக்கு அதிர்ஷ்டமும், செல்வமும், பெரும்பாக்கியமும் வந்து சேரும். ஆனால் நண்பர்களால் இவர்களுக்கு அனுகூலம் எதுவும் ஏற்படாது. நண்பர்களுக்காக இவர்கள்தான் பாடுபட வேண்டியிருக்கும். எனவே அவர்களால் பாதகம்தான் ஏற்படும்.

இந்த லக்ன ஜாதகர்கள் கிரசின், பெட்ரோல் போன்ற தொழில் ஸ்தாபனங்களிலும், மருத்துவ விடுகளிலும், கலை, நடிப்பு ஆராய்ச்சித் துறைகளிலும் நெருப்பினால் உலோகங்களை உருக்கி அச்சுவார்க்கப்படும் இயந்திர தொழிற்சாலைகளிலும், உணவுப்பொருள் அரைக்கும் இயந்திர தொழிற்சாலைகளிலும் சமையல், ஓட்டல் போன்ற தொழில்களிலும், வர்ணங்களைச் சேர்த்து ஓவியம் தீட்டுதலிலும் ஈடுபடக்கூடும். ஒரு சிலர் போலீஸ், இராணுவம் முதலிய துறைகளில் உத்தியோகம் பெறுவார்கள். எத்தொழில் ஈடுபட்டாலும் குறைந்த உழைப்பால் அதிக ஊதியம் பெறுவார்கள். ஒரு சிலர் அரசியலில் ஈடுபட்டு ஓயாது பேசுவர். இவர்களது பேச்சு வன்மையில் மயங்கி இவர்களால் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையால் இவர்களது உதவியை பிறர் நாடுவதால் இவர்கள் அதிக சிரமமின்றி உட்கார்ந்த இடத்திலிருந்தே பொருளீட்டவும் செய்வார்கள். ஒரு சிலர் அரசாங்கத்தில் பெரும் பதவி வகிப்பதும் உண்டு. எந்த தொழிலில் ஈடுபட்டாலும் கலை நுட்பமும், வாக்கு சாதுரியமும், சங்கீதமும் இவர்களிடத்தில் சுடர்விட்டுப்பிரகாசிக்கும்.

ஆடம்பர வசதிகள், பெண்கள் விரும்பும் ஆடை, ஆபரணங்கள் இவற்றின் வியாபாரத்தாலும், கார், டாக்சி-லாரி போன்ற வாகனங்களை கிரய-விக்கிரயம் செய்வதாலும், அவற்றை வாடகைக்கு விடுவதாலும், அவற்றிற்கு வேண்டிய ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கி விற்பதாலும் அதிக லாபம் சம்பாதிப்பார்கள், ஆனால் பண லேவாதேவி செய்யும் தொழில் இவர்களுக்கு உகந்ததல்ல.

இந்த லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு உழைத்தால் தான் ஊதியமே தவிர சுக ஜீவனம் என்று சொல்லுவதற்கில்லை. மேலும் இவர்களுக்கு சொத்துக்களாலும், நிலபுலன்களாலும், பயிர்த் தொழிலினாலும், வீடு-நிலம் முதலிய ஸ்திர பொருட்களை கிரய-விக்கிரயம் செய்வதாலும், காண்ட்ராக்ட் வேலைகளிலும் இயந்திரக் கருவிகளை தயார் செய்வதிலும் நல்ல ஆதாயங்களைப் பெற்றிடுவார்கள்.இவர்கள் எப்போதும் கம்பீரமான உடைகளையே உடுத்துவார்கள். உணவு, உடை முதலியவற்றிற்காக அதிகம் செலவிடுபவர்களாக இருப்பார்கள். ஆனால் உணவுப் பொருட்களை சூடு தணியாமல் சாப்பிடுவதையே விரும்புவார்கள். சூடு குறைந்திருந்தால் அதை சாப்பிடாமலேயே விடுவார்கள்.

இந்த லக்ன ஜாதகர்கள் பொதுவாகவே ஆடம்பரத்துக்காகவும், பெருமைக்காகவும், வீண் ஜம்பத்திற்காகவும் கணக்கு பாராமல் செலவிடும் அதிக செலவாளிகள். சதாநேரமும் பிரயாணத்தில் ஈடுபடுவதால் அதிக நேரமும் பணமும் செலவாகும். இவர்கள் கையில் பணம் தங்குவதுபோல் சேரும் பணத்தை வீட்டில் பொறுப்பானவர்களிடத்தில் ஒப்படைத்தாலோ அல்லது சேமிப்பு நிதியில் அதைப் போட்டு வைத்தாலோ சிறந்ததாகும். இவர்கள் போட்டி, பந்தயம், லாட்டரி, ரேஸ், சூதாட்டம் போன்றவைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அதனால் நேரமும் பணமும் செலவாகுமேயல்லாது செலவழிக்கும் பணமும் நஷ்டமாகும். மன அமைதியும் குறையும்.

இனி இந்த லக்னத்தில் பிறந்த மாதர்களின் குண விஷேங்களைப் பார்க்கலாம்.இந்த லக்னத்தில் தோன்றிய மாதர்கள் வசீகர முகத்தோற்றமுடையவர்கள். எடுப்பான், அழகான உடற்கட்டு அமையப் பெற்றவர்கள். சிறுவயதிலிருந்தே குடும்ப விவகாரங்களில் அக்கறையுடையவர்கள். விருந்தாளிகளுக்கு உபசாரம் செய்வதில் பிரியமுடையவர்கள். கலையார்வம் படைத்தவர்கள், சங்கீதம், நடனம், நடிப்பு ஆகிய துறைகளில் ஏதாவதொன்றில் திறமைசாலிகளாக இருப்பார்கள். எந்தக் காலத்திலும் முகம் கோணாமல் சிரித்துப் பேசி கோபமடைந்தவர்களையும் சாந்தப்படுத்தும் இயல்பு பெற்றவர்கள். ஆனால், துக்கம் தாளாத இவர்கள் மற்றவர்கள் படும் துயரத்தையும் சகித்துக் கொள்ளமாட்டார்கள். ஏதாவது கவலை ஏற்படுமாயின் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடுவதோடு தங்களது சுயபலத்தையே இழந்தவர்போல காணப்படுவார்கள். கவலை ஒன்றே இவர்களுடைய மன நோய்க்கு காரணம் ஆகுமேயன்றி உடல் பிணிகள் இவர்களை அதிகம் வாட்டிடாது. உடற்பிணிகள் ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்வார்கள். ஆனால் மனவருத்தத்தை மட்டும் தாங்கமாட்டார்கள்.

எந்த வேலையையும் சுறுசுறுப்புடனும் திறமையுடனும் முடித்துக் காட்டுவார்கள். பிறருக்காக சிரமம் பாராட்டாது அவர்களுடைய காரியங்களை முடித்துக் காட்டுவார்கள். திருமண வாழ்க்கை சற்று கவலை நிறைந்ததாக அமைந்தாலும் பொருட்படுத்தாது கணவரையும், மக்களையும் அன்பு குறையாமல் பேணிக் காத்திடுவார்கள். அழனு வாய்ந்த எந்த பொருளையும் சேகரித்துக்கொள்ளத் தயங்கமாட்டார்கள். உணவு, உடைகளில் மிகவும் அக்கறை கொண்ட இவர்கள் உயர்தர ஆடை ஆபரணங்களையும் பட்சணங்களையுமே விரும்புவார்கள். இவர்களுடைய கை மிகவும் தாராளமாகதால் இவற்றுக்காக ஏற்படும் செலவினங்கள் குறித்துக் கவலை கொள்ளமாட்டார்கள்.

சஞ்சல புத்தி கொண்ட இவர்கள் அவ்வப்போது சூழ்நிலைக்கேற்றவாறு தங்கள் கருத்தையும் கொள்கையையும் மாற்றக் கொள்வார்கள். நயமாகவும், புகழ்ந்த பேசியும் இவர்களிடம் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாமேயல்லாது அதிகாரத்தாலோ அல்லது கோபத்தாலோ அல்லது பொருளை லஞ்சமாகக் கொடுப்பதாலோ இவர்களிடம் எந்தக்காரியத்தையும் சாதித்துக் கொள்ள இயலாது. தம்மைப் பிறர் போற்றிப் புகழ வேண்டும் என்ற ஆவல் அதிகம் கொண்டவர்களாதலால் சமூக சேவைகளிலும், குடும்ப நிகழ்ச்சிகளிலம் முன்னணியில் நிற்பார்கள்.

என்னில் உள்ளது